ஆண்டிபட்டி: பூட்டி சீல் வைக்கப்பட்ட ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை சுத்தம் செய்வதற்காக ஆண்டிபட்டி வட்டாட்சியர் நேற்று உறுப்பினர் அலுவலகத்தை திறந்தார். அதிமுக சட்டப் பேரவைத் தலைவர் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை கடந்த ஆண்டு பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உட்பட 22 எம்எல்ஏக்களுக்கு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து மே 23ம் தேதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மகாராஜன் வெற்றி பெற்றார். இதையடுத்து ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை தூய்மைப்படுத்து வதற்காக நேற்று ஆண்டிபட்டி வட்டாட்சியர் பாலசண்முகம் சீல் வைக்கப்பட்டிருந்த பூட்டை திறந்தார்.இதனால் நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் விரைவில் புதுப்பொலிவுடன் செயல்பட உள்ளதால் திமுக கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.