கடையம்: மழை இல்லாததாலும், கோடை வெயில் கொளுத்தி வருவதாலும் நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடையம் ராமநதி அணை ஒரு சொட்டு தண்ணீர்கூட இன்றி வறண்டு கிடப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மொத்தம் 11 அணைகள் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான அணைகளில் ஒன்று கடையம் அருகே அமைக்கப்பட்ட ராமநதி அணை. 84 அடி கொள்ளளவு கொண்ட இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. அத்துடன் கடையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் ராமநதி அணையில் தண்ணீர் 3 முறை நிரம்பி வழிந்தது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் செழிப்பாக இருந்ததால் கார் பருவ நெல் சாகுபடியும், பிற பயிர்கள் சாகுபடியும் தங்கு தடையின்றி நடந்தது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது போக்கு காட்டி சரிவர பெய்யாமல் ஏமாற்றியது. இருப்பினும் அணையில் இருந்த நீர் இருப்பு மற்றும் அவ்வப்போது மிதமாக பெய்த சாரல் மழையை நம்பி பிசான பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.