நாகை: நாகையில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு ஊழியர்களும், உறவினர்களும் அள்ளி சென்றதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கிடங்கு பொறுப்பாளரை முற்றுகையிட்டனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், நாகை மாவட்டம் அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்களை பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் வாரி வழங்கியது. இவ்வாறு வாரி வழங்கிய நிவாரண பொருட்கள் எல்லாம் நாகை ஆஸ்பத்திரி சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்களில் வைக்கப்பட்டது. அங்கிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த கிடங்கில் பணிபுரியும் ஊழியர்களும், அவர்களது உறவினர்களும் நிவாரண பொருட்களை தங்களது வாகனங்களில் அள்ளிச் செல்வதாக அருகிலுள்ள நம்பியார் நகர் மீனவ கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது.