சென்னை: மீஞ்சூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்டு பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த காட்டூர் கொக்குமேடு கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (40). இவரது மனைவி சிவகாமி (35). இவர்களது மகன் திவ்யபரதன் (7). இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேறொரு பகுதியில் வசித்து வந்தபோது தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், மனைவியை பிரிந்து வேலாயுதம் சென்றுவிட்டார். இதன் பின்னர் கொக்கு மேட்டில் உள்ள தாத்தா வீட்டில் திவ்யபரதன் வளர்ந்து வருகிறான். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சிவகாமி, வாயலூர் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சிவகாமி தங்கியிருந்த வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடும் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிவகாமி கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.