அனகாபுத்தூர் சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் மின்கம்பம் விழுந்து தீப்பிடித்தது

தாம்பரம்: தாம்பரம் - அனகாபுத்தூர் சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் மின்கம்பம் விழுந்து தீவிபத்து ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30). தாம்பரத்தில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று தனது நண்பர் னிவாசன் (40) என்பவருடன் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் தாம்பரம் - அனகாபுத்தூர்  சாலையில் திருநீர்மலை நோக்கி சென்றுகொண்டு இருந்தார்.கன்னடபாளையம் குப்பை கிடங்கு அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயற்சித்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில்  இருவரும் கீழே விழுந்தனர்.  

இதனை சற்றும் எதிர்பார்க்காத லாரி ஓட்டுனர் திடீரென லாரியை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது வேகமாக மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து கீழே சாய்ந்தது.  அப்போது, மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடித்ததால், சாலையோரம் இருந்த முட்செடிகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சுமார் ஒரு ஏக்கருக்கும் மேலாக இருந்த முட்புதர் எரிந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த நந்திவரம் பகுதியை சேர்ந்த  முருகதாஸ் (26) என்பவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

Related Stories: