வேளச்சேரி: சென்னை மாநகராட்சி 180வது வார்டுக்கு உட்பட்ட தரமணி மகாத்மா காந்தி நகர், பெரியார் நகர், பாரதி நகர், அண்ணாநகர், கலைஞர் நகர், கானகம் ஆகிய பகுதிகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் பொது குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் ஒருநாள் வீட்டு ஒருநாள் குடிநீர் வழங்கி வந்தனர். ஆனால் கடந்த 10 நாட்களாக இந்த பகுதி குழாய்களில் வழங்கப்படும் குடிநீரை நிறுத்திவிட்டு தினந்தோறும் லாரிகளில் வினியோகம் செய்கின்றனர். ஒரு தெருவுக்கு 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் ஒரு வீட்டிற்கு 5 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. எனவே இது போதுமானதாக இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் வசிக்கும் கணவன், மனைவிகள் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். குழந்தைகளும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் நிலையில் உள்ளனர். குடிநீர் வாரியம் சார்பில் ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மதிய நேரத்தில் தெரு தெருவாக லாரிகளில் சப்ளை செய்வதால் வேலைக்கு செல்லும் பெரும்பாலானவர்களால் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.