தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை கொண்டு வர வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் யோசனை

சென்னை: தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை உருவாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் அதிகரித்து வரும் மதுப்பழக்கம் குறித்து ஒரு மருத்துவ இதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன. இந்தியாவில் தேசிய அளவில் மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதையே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. அதில், உலக அளவிலான மதுநுகர்வு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள டி.யூ.டிரெஸ்டன் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவில் மதுநுகர்வு கடந்த 7 ஆண்டுகளில் 38% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக போராடி வரும் நிலைமை மாறி, நாடு முழுவதிலும் மதுவிலக்குக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தான் இந்த இதழ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாராக இருந்தும், அதற்கு தடையாக இருப்பது மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் தான். அதனால் தான் மது விலக்கை நடைமுறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் மானியங்களை வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது. மத்தியில் அமையும் ஆட்சியை வலியுறுத்தி, தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்க பாமக நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: