ஒரகடத்தில் வாலிபர் சடலம் மீட்பு வழக்கில் திருப்பம் இரும்பு கம்பியால் தாக்கியதால் கழுத்தை நெரித்து கொன்றோம்: கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை:  ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டதில் திருப்பமாக அவரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இறந்த வாலிபர் இரும்பு கம்பியால் தாக்கியதால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைதான இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் லாரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதன் பின்புறம் கடந்த மே 5ம் தேதி வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். தகவலறிந்து  ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது இறந்து கிடந்தவர் ஒரகடம், எம்.சி ராஜா தெருவை சேர்ந்த எல்லப்பன் மகன் பொற்செல்வன் (24) என்பதும், அதேப் பகுதி தனியார் தொழிற்சாலை ஊழியர் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக, பொற்செல்வனின் நண்பர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சமித் சக்கரபதி (29), ஆனந்த் பகாடி (25) ஆகிய இருவரும் சேர்ந்து பொற்செல்வன் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும்  ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையிலடைத்தனர்.

 

விசாரணையில் கொலையாளிகள் வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பொற்செல்வன் குடியிருக்கும் பக்கத்து வீட்டில்  ஒரு மாதத்துக்கு முன்பு வந்து சமீத் சக்கரபதி, ஆனந்த் பகாடி இருவரும் வாடகைக்கு தங்கினர். இவர்கள் இருவரை பொற்செல்வன் அடிக்கடி வம்புக்கு இழுத்துள்ளான். அதன்படி சம்பவம் நடந்த அன்று 2 பேரும் தொழிற்சாலையின் பின்புறம் நடந்து சென்றனர். அப்போது பொற்செல்வன் இரும்பு கம்பியை கையில் வைத்து கொண்டு 2 பேரையும் தலையில் அடித்து உள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் பொற்செல்வனை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு தெரியவந்தது.

Related Stories: