சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முத்துராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). மனைவி பஞ்சவர்ணம். 2 குழந்தைகள் உள்ளனர். பல்வேறு திருட்டு சம்பவங்களில் ராமச்சந்திரன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை செய்ய சிவகாசி கிழக்கு போலீசார், ராமச்சந்திரனை கைது செய்து, காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை விசாரித்துள்ளனர். நேற்று காலை ராமச்சந்திரன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். போலீசார், அவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.