திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 12வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் அடிக்கடி கழிவுநீர் வெளியேறி குடியிருப்புகளில் தேங்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால், பாதாள சாக்கடை அடைப்பை தற்காலிகமாக சரி செய்கின்றனர். ஆனால், நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை அடைப்பால், அங்குள்ள வீடுகளில் கழிவுநீர் புகுந்தது. இந்நிலையில், பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னையை நிரந்தரமாக சரிசெய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று காலை வசந்தம் நகர் அருகே சாலை மறியல் செய்ய முடிவு செய்து ஒன்று கூடினர். தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லுமாறு பேசினர்.