சென்னை: ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நலவாரியத்துக்கு மாவட்ட வாரியாக குழு அமைத்து அறிக்கை அளிக்க உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர்கள் பல்வேறு சலுகைகள் பெற முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். அதைதொடர்ந்து ஓய்வுபெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை காவலர்கள் வரை அனைவரும், ஓய்வு பெற்ற காவலர்களுக்கான தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மற்றும் தமிழகம் டிஜிபி.டி.கே.ராஜேந்திரனிடமும் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2018-19 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக டிஜிபி. டி.கே. ராஜேந்திரன் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், சென்னை மாநகரம், நகரங்கள், மாவாட்ட அளவிலும் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நல வாரிய குழு ஒன்றை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சென்னை மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இந்த குழுவிற்கான இயக்குனர்களாக காவல் தலைமையகத்தில் உள்ள துணை ஆணையர் ஒருவர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மாவட்ட அளவில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று தெரியவித்துள்ளார்.