சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள கேன்டீனில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டதால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். விரைந்து தீயணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் 2ம் நுழைவாயில் உள்பகுதியில் தனியார் கேன்டீன் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் தோசை சுடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டபோது, காஸ் அடுப்பில் தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பயணிகள் அலறியடித்து ஓடினர். கேன்டீன் ஊழியர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்த அவசர கால தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.