ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் புயலின் நினைவுச்சின்னமாக விளங்கி வரும் சேதமடைந்த தேவாலயத்தின் கற்களை பெயர்த்து எடுத்து செல்வதை தடுத்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டில் அடித்த புயலால் தனுஷ்கோடி நகரம் கடலில் மூழ்கின. சேதமடைந்த பழமையான கட்டிடங்கள் மட்டுமே புயலின் எச்சங்களாய் இன்றும் காட்சியளித்து கொண்டிருக்கின்றன. புயலால் சிதிலமடைந்து காணப்படும் ரயில்வே ஸ்டேஷன், போஸ்ட் ஆபிஸ், பஞ்சாயத்து அலுவலகம், பள்ளி, விநாயகர் கோயில், தேவாலயம் போன்றவற்றை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். புயலின் நினைவு சின்னங்களாக காட்சியளித்து கொண்டிருக்கும் இக்கட்டிடங்கள் உப்புக்காற்றினால் சேதமடைந்து வலுவிழந்து வருகின்றன. புயலில் சேதமடைந்த கட்டிடங்களை பாதுகாத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.