தெருவில் சுற்றித்திரிந்த நாயை அடித்து கொன்றவர் கைது

பெரம்பூர்: சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன், தெருவில் சுற்றித் திரிந்த நாயை மர்ம நபர் ஒருவர் கொடூரமாக அடித்து தரதரவென இழுத்துச்சென்று, கூவம் ஆற்றில் மூழ்கடித்து, கொன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ேவகமாக பரவியது. இதுபற்றி அறிந்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர், இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். அதில், சம்பவம் நடந்தது உண்மை என தெரியவந்தது. பின்னர், வீடியோ ஆதாரத்துடன் இதுபற்றி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த குமார் (42) என்பவர், நாயை அடித்து கொன்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவருடைய தந்தையை நாய் கடித்ததால், ஆத்திரத்தில் நாயை அடித்து கொன்றதாக கூறினார்.  இதையடுத்து, மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: