சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் வீடு முற்றுகை: ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரம்: சாதி சான்றிதழ் கோரி கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டு, பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால் இவர்களது குழந்தைகள் 9ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது.எனவே, சாதி சான்றிதழ் வழங்கக் கோரி இந்த சமுதாயத்தினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நேற்று காலை அந்த சமுதாயத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தனர். சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணியிலிருந்த போலீசார், ‘கலெக்டர் இல்லை’ என்று அவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். ஆர்டிஓ சுமன், பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள், வழிபாடு மற்றும் தொழில் குறித்து மானுடவியல் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தந்த பின், சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: