சென்னை: கோயம்பேடு அருகே குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான காலி மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள சென்னை குடிநீர் வாரியம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலையே அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏக்கர் கணக்கில் உள்ள அந்த பகுதியில் காய்ந்த மரங்கள் மற்றும் செடிகள் அதிகமாக காணப்பட்டதால் தீ மளமளவென பரவி 1 மணி நேரத்திற்கு மேலாக எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீ விபத்தின் காரணமாக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.