பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தீவிபத்து : மீனம்பாக்கத்தில் பரபரப்பு

ஆலந்தூர்: பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் வளாகத்தில் சூப்பர் மார்க்கெட்  உள்ளது. நேற்று காலை 8  மணியளவில் இந்த சூப்பர்  மார்க்கெட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி பொருட்கள் எரிய  தொடங்கியது. தகவலறிந்து பரங்கிமலை போலீசார், தீயணைப்பு துறை வீர்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அருகிலேயே பெட்ரோல் பங்க் உள்ளதால் அங்கு தீ பரவாதபடி போலீசார்   தடுப்புகளை ஏற்படுத்தினர்.

மேலும்,  வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்கு உள்ளே இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: