சென்னை: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக தற்போதைய தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம், சிபிஐ அதிகாரிகள் சென்னையில் விசாரணை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள ஒரு குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில ஆண்டுகளுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு டைரியை கைப்பற்றினர். அதில், போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர், மாநகராட்சி அதிகாரிகள், மத்திய கலால்துறை என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ₹45 கோடி வரை மாமூல் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு, அப்போதைய வருமான வரித்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் இந்த விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ டெல்லி அதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் 2 ஐஜிக்கள், டிஐஜிக்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.