திருவனந்தபுரம்: கேரளாவில் பிளஸ்2 தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக ஆசிரியர் தேர்வு எழுதிய சம்பவத்தில் பள்ளி முதல்வர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கேரளாவில் இந்தாண்டுக்கான பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. மொத்தம் 3,69,238 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 84.33 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடம் 83.75 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தநிலையில் கோழிக்கோட்டில் ஒரு பள்ளியில் மாணவர்களுக்காக ஆசிரியரே தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி மாணவர்களின் தேர்வுத்தாளை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் தான் இதை கண்டுபிடித்தனர். பல ேதர்வு தாளில் ஒரே போன்ற கையெழுத்து இருப்பதை கண்ட ஆசிரியர்கள் சந்தேகமடைந்து, அந்த மாணவர்கள் எழுதிய மற்ற தேர்வுத்தாள்களை வரவழைத்து பரிசோதித்தனர். அப்போது தான் தேர்வு எழுதியதில் உள்ள தில்லுமுல்லு தெரியவந்தது. இதையடுத்து தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியர்கள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தேர்வு எழுதிய சந்தேகமுள்ள மாணவர்களை திருவனந்தபுரம் வரவழைத்து அவர்களை எழுத வைத்து பரிசோதித்தனர். அப்போது குறிப்பிட்ட தேர்வு எழுதியது மாணவர்கள் இல்லை என்பது தெரியவந்தது.