பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண் உடுமலை அருகே சிக்கினார்: கணவரை ஏமாற்றியதாக பரபரப்பு வாக்குமூலம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், குழந்தையை கடத்திய பெண்ணை உடுமலை அருகே போலீசார் கைது செய்தனர். தனது குழந்தை இறந்ததால் கணவரை ஏமாற்ற குழந்தையை கடத்தியதாக அந்த பெண் பரபரப்பு  வாக்குமூலம் அளித்துள்ளார்.

 கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் நரிக்கல்பதியை  சேர்ந்தவர் பாலன்(40), மனைவி தேவிக்கு (30),  கடந்த 29ம் தேதி இரவு  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.  அப்போது அவருடன் 35வயது மதிக்கத்தக்க பெண், தனது உறவினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி பழகியுள்ளார்.  இரவு நேரத்தில் தேவியுடன் தங்கியதுடன்,  6 நாட்களாக குழந்தையை அந்த பெண்  கவனித்து  வந்துள்ளார்.  நேற்று முன்தினம் மதியம் தேவி  டிஸ்சார்ஜ் ஆனார். அப்போது அந்த பெண், அவர்களை ஏமாற்றி குழந்தையை கடத்தி சென்றுவிட்டார்.   போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், குழந்தையின் உடலில் துணியை   போர்த்தி எடுத்து ெசன்று ஆட்டோவில் தப்பியது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.  தீவிர விசாரணையில் அந்த பெண், திருப்பூர் மாவட்டம்  உடுமலையை அடுத்த குறிச்சிகோட்டையை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி   லிங்கசாமி என்பவரது மனைவி மாரியம்மாள்(36) என தெரியவந்தது.

 இதையடுத்து  நள்ளிரவில், குறிச்சிகோட்டைக்கு சென்ற தனிப்படை போலீசார், வீட்டில் இருந்த  மாரியம்மாளை பிடித்தனர். அவரது கணவர் லிங்கசாமி, இது எங்கள் குழந்தை என்று போலீசாரிடம்  வாதாடினார். பின் மாரியம்மாள்,  குழந்தையை கடத்தி வந்ததை தெரிவிக்கவே,  லிங்கசாமி அதிர்ச்சியடைந்தார். மீட்கப்பட்ட குழந்தையை, நள்ளிரவில்  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்  இருந்த பெற்றோர் தேவி, பாலன் ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  போலீசாரிடம்  மாரியம்மாள் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது: லிங்கசாமிக்கும்,  எனக்கும்  திருமணமாகி 5ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் கர்ப்பமானேன்.  ஆனால்,  குழந்தை பிறக்கும்போது அருகே லிங்கசாமி இருந்தால் தோஷம் ஏற்படும் என  ஜோசியர் ஒருவர் தெரிவித்தார். இதனால், 9 மாத  கர்ப்பிணியாக இருந்த நான், கோவை  அருகே ராமநாதபுரம் சுங்கத்தில் உள்ள எனது சித்தி வீட்டிற்கு  பிரசவத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பு சென்றேன்.  ஆனால், கடந்த மாதம்  24ம் தேதி குழந்தை இறந்து பிறந்தது. இதனால்   மனவேதனையடைந்து, குழந்தையில்லையென்றால் கணவர் தகராறு  செய்வார் என்று பயப்பட்டேன். இதனால், கணவரிடம் ஆண் குழந்தை  பிறந்துள்ளது, இன்னும் சிலநாட்களில் ஊருக்கு வந்து விடுவேன் என  தொலைபேசியில் தகவல்  தெரிவித்தேன்.

 வீட்டிற்கு குழந்தையுடன் செல்ல  வேண்டும் என்பதால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கடந்த 1ம் தேதி  வந்தேன். அப்போது, ஒரு  பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதையறிந்தேன்.  அந்த குழந்தையை எப்படியாவது கடத்தி  சென்று, நம் குழந்தை என கணவரிடம் காட்ட  வேண்டும் என்று நினைத்தேன்.  இதற்காக அந்த தம்பதியிடம் பேச்சுகொடுத்து  ஏமாற்றினேன். சில நாட்களாக குழந்தையை கவனித்து வந்த என்னை, அவர்கள்  முழுமையாக நம்பினர். இதனால்,  டிஸ்சார்ஜ் ஆகும்போது, குழந்தையின் தாய்,  தந்தையிடம்  சொட்டு மருந்து வாங்கி வரும்படி கூறினேன். அவர்கள் திரும்பி  வருவதற்குள் குழந்தையை அங்கிருந்து கடத்தி, ஆட்டோவில் ஏறி பின் பஸ்சில்  வீட்டிற்கு எடுத்து சென்றேன். வீட்டிற்கு குழந்தையுடன் சென்றதும், எனது  கணவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நான் எனது பெயர், முகவரி எதையும் யாரிடம் தெரிவிக்கவில்லை  என்பதால், என்னை கண்டு பிடிக்க வாய்ப்பில்லை என்று நினைத்தேன். மாட்டிக்கொள்வேன்  என நினைக்கவில்லை’’ என்று  தெரிவித்துள்ளார்.இதையடுத்து,  கிழக்கு ஸ்டேஷன் போலீசார் மாரியம்மாளை கைது செய்து, பொள்ளாச்சி ஜேஎம்1  கோர்ட்டில் நேற்று காலை ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: