சென்னை: சென்னையில் இருந்து 2.45 மணிக்குள் சென்றடைய வேண்டிய பயண தூரத்துக்கு 14 மணிநேரம் பயணிகள் காத்திருந்த அவலம் விமான நிலையத்தில் நடந்தது.சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அதில் 154 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். இவர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு விமான நிலையம் வந்து அனைத்து பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு காத்திருந்தனர்.
விமானத்தில் ஏறுவதற்காக போர்டிங் வாசலில் குறிப்பிட்டிருந்த 5வது வாசல் அருகே வந்தனர். ஆனால் விமானம் புறப்படும் தடம் மாற்றப்பட்டது, எனவே தரைத்தளத்தில் 11வது வழித்தடம் பகுதிக்கு வருமாறு அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்தப்பயணிகள் 9 மணிக்கு 154 பேரும் வந்தனர். விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே, விமானம் தாமதமாக 11 மணிக்கு புறப்படும் என்று தனியாக ஒரு ஹாலில் அமரவைத்தனர். ஆனால் 11 மணிக்கு விமானத்தின் இயந்திரக்கோளாறு இன்னும் சரிசெய்யவில்லை. எனவே, மதியம் 2 மணிக்கு புறப்படும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த பயணிகள், விமானம் புறப்படும் நேரத்தை ஏன் மாற்றி மாற்றி அறிவிக்கிறீர்கள் என்று கோஷம் எழுப்பினர். ஏர் இண்டியா அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தி சிற்றுண்டி வழங்கினர்.