சென்னை: பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பதவி உயர்வுக்கான கோப்புக்கு ஒப்புதல் அளிக்காமல் அதை தேர்தல் ஆணையம் திருப்பி அனுப்பியது பொதுப்பணித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இந்த பிரிவுகள் மூலம் பல்வேறு திட்ட பணிகளை மேற்ெகாள்ள வசதியாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மண்டல தலைமை பொறியாளர் கண்காணிப்பின் கீழ் பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் முதன்மை தலைமை பொறியாளர் மேற்பார்வையின் கீழ் தான் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை தலைமை பொறியாளர், தலைமை பொறியாளர்கள் பணியிடங்கள் 7 காலியாக உள்ளது. குறிப்பாக, பொதுப்பணித்துறையில் அணைகள் பாதுகாப்பு இயக்ககம், கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், நீர்வளத்துறை வடிவமைப்பு மற்றும் கட்டுமான ஆதாரம், மதுரை மண்டல தலைமை பொறியாளர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர், கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர், தொழில்நுட்ப பிரிவு தலைமை பொறியாளர் என 8 பணியிடங்கள் காலியாக உள்ளது. தொடர்ந்து மே மாதத்தில் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம், மதுரை மண்டல கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் ரபீந்தர் ஓய்வு பெறுகின்றனர்.