மோடிக்கு திருமணமாகவில்லை உத்தரப்பிரதேச பிரதமர் மாயாவதி : குஜராத் முதல்வர் உளறல்

போபால்: ‘‘பிரதமர் மோடிக்கு இன்னும் திருமணமாகவில்லை, உத்தரப் பிரதேச பிரதமர் மாயாவதி’’ என்று குஜராத் முதல்வர் விஜய்ரூபானி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளரை ஆதரித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தேசத்திற்காக ஓய்வில்லாமல் உழைப்பதற்காக திருமணமே செய்துக் கொள்ளவில்லை, அவர் எந்த பின்னணியும் இல்லாமல் பிரதமர் பதவியை அடைந்துள்ளார். குஜராத் மாநிலம் அவரது ஆன்மா போன்றது; இந்திய தேசம் அவரது கடவுள் போன்றது.

 பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி என்பது திருடர்களின் கூட்டணியாகும். லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்தவர், மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தை திவாலாக்கிவிட்டார். மாயாவதி உத்தரப் பிரதேச ‘பிரதமராக’ 5 வருடம் இருந்துள்ளார். இவர்கள்தான் மோடிக்கு எதிராக சேர்ந்துள்ளனர். மோடி மீண்டும் பிரதமர் ஆனதும் இவர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பேசினார். பிரதமர் மோடி தனக்கு யசோதா பென்னுடன் திருமணம் நடைபெற்றதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இது குஜராத் முதல்வருக்கு எப்படி தெரியாமல் போனது என்றும் முதல்வருக்கும் பிரதமருக்கும் வித்தியாசம் தெரியாமலா ஒரு மாநில முதல்வர் இருப்பார் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: