வேடசந்தூர்: வடமதுரையில் சிறுமி மர்ம மரண வழக்கில் பிளஸ்2 மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சிறுமியை பலாத்காரம் செய்து உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்றது தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்த வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 7ம் வகுப்பு மாணவி. கடந்த 16ம் தேதி பெற்றோர் வெளியே சென்றபோது, வீட்டில் சிறுமி வாயில் மின்வயரை கடித்தவாறும், உடலில் காயங்கள், கீறல்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வடமதுரை போலீசார், சிறுமியின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்தனர். ஆனால் பெற்றோர்-உறவினர்கள், மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினர். ேமலும் 21ம் தேதியன்று, ‘வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். எங்களுக்கு அவர்களை தெரியும். போலீசார் நன்கு விசாரிக்காமல் தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்ய கூடாது. முறையாக விசாரணை நடத்த வேண்டும்’ என கோரி திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்பி சக்திவேலிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து எஸ்பி உத்தரவின்பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.