சென்னை: கிழக்கு கடற்கரை சாலை அகலப்படுத்துவதற்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தராமல் 5 ஆண்டுகள் இழுத்தடித்த செங்கல்பட்டு ஆர்டிஓவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள தேவனேரி கிராமத்தில் சேகர், பிரபாகரன் ஆகியோரின் 226 ச.மீ நிலத்தை கடந்த 2014ல் தமிழக அரசு கையகப்படுத்தியது. ஆனால் நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து சேகர் மற்றும் பிரபாகரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு செங்கல்பட்டு ஆர்டிஓவுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் 2016ல் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ஆர்டிஓ அமல்படுத்தவில்லை. மனுதாரர்கள் தொடர்ந்து ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இழப்பீடு கேட்டு மனுக்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.