கோவை : பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் கைதான 5 பேர் மீது பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி பெண்களிடம் பழகி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மணிவண்ணனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில், பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெண்ணை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதியப்பட்டிருந்தது. தற்போது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி