சென்னை: சென்னை மாநகரத்தின் அரிய தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்த எழுத்தாளர் எஸ்.முத்தையா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மாநகரத்தின் அரிய தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்த எஸ்.முத்தையா திடீர் மறைவு செய்தி கேட்டு மீளாத் துயரம் அடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை நீள அகலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நன்கு அளந்து அறிந்த முத்தையா எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் சிறப்பாகப் பணியாற்றி மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தவர். சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் பிறந்த இவர் சென்னையின் கலாச்சார மற்றும் வரலாற்று உண்மைகளை விரல் நுனியில் வைத்திருந்தவர். சென்னையின் வரலாற்று தகவல்களை பல பத்திரிகைகளில் குறிப்பாக ஆங்கில பத்திரிகையில் விரிவாக எழுதி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு சென்னையின் பெருமைகளை எடுத்துரைத்தவர். படிக்கக் கிடைக்காத அரிதான ஒவ்வொரு ஆவணங்களில் இருந்தும் பல்வேறு தகவல்களை திரட்டி சேகரித்து வைத்து- அவற்றை அனைத்து வாசகர்களிடமும் தன் எழுத்துத் திறமையால் பகிர்ந்து கொண்டவர்.