சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூம், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரும் போட்டியிட்டனர். இந்நிலையில் வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் பகுதி மக்களிடம், கடந்த 3 நாட்களுக்கு முன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுகவினர், ‘‘பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கும், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளருக்கும் வாக்களியுங்கள். ஓட்டுபோட்ட பிறகு பணம் தருகிறோம்,’’ என கூறியுள்ளனர். அதன்படி வாக்களித்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 19வது பிளாக் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கிருந்த பெண்களை கலைந்து செல்லும்படி கூறினர். இந்நிலையில், நேற்று மதியம் 100க்கும் மேற்பட்ட பெண்கள், அதே அலுவலகத்தில் கூடி, ஓட்டு போட்ட எங்களுக்கு பணம் தரவேண்டும் என கூறி காத்து கிடந்தனர். இந்த சம்பவம் வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.