பாமாகோ: மாலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தால் எழுந்த நெருக்கடி காரணமாக பிரதமர் சூமேலூ பூபேயே மாய்கா அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தார். மாலி நாட்டின் மோப்டி அருகே உள்ள ஒகோஸ்சாகோ கிராமத்தில் கடந்த மார்ச் 23ம் தேதி புலானி இனத்ைத சேர்ந்த 160 பேர் கும்பலால் துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னணியில் தோகன் பழங்குடியினர் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து மாலியில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனால், நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தொடர் வன்முறை சம்பவங்களை பிரதமர் கட்டுப்படுத்த தவறி விட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. கடந்த செவ்வாயன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் இப்ராகிம் பாவ்பகார் கெய்டா, பிரதமர் பெயரை குறிப்பிடாமல் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்நிலையில், கடந்த புதனன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். பிரதமர் மாய்காவும், அவருடைய அரசும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்கள்.