பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் சத்ருகன் சின்ஹா. 73 வயதாகும் சின்ஹா, இளம் வயதில் கல்லூரி படிப்பு முடித்ததும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு கற்றார். சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டும் என்ற கனவோடு தொடர் முயற்சிகள் செய்தவர், 1960களில் இந்தி படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். பிறகு திடீரென வில்லனாகி பிரபலமானார். 1974ல் தர்மேந்திராவுடன் தோஸ்த் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். அது அவரது சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. 1976ல் காளிச்சரண் படத்தில் ஹீரோவாக புரமோஷன் ஆனார். அது அவரது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். காரணம், காளிச்சரணில் நடிக்க வேண்டியது அப்போதைய சூப்பர் மெகா ஸ்டார் ராஜேஷ் கன்னா. 1976, 77 என இரண்டு வருடத்துக்கு கால்ஷீட் இல்லை என கன்னா பின்வாங்க, படத்தின் இயக்குனர் சுபாஷ் கய் தேர்வு செய்தது சத்ருகன் சின்ஹாவைத்தான். இது தயாரிப்பாளர் சிப்பிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய கேரக்டரில் வில்லனாக நடித்தவரை ஹீரோவாக்குவதா? இது எடுபடுமா? என யோசித்தார். சுபாஷ் கய் அவருக்கு நம்பிக்கை கொடுத்து படத்தை ஆரம்பித்தார்.
படம் வெளிவந்ததும் சத்ருகனின் ஸ்டைல் பரபரப்பாக பேசப்பட்டது. எந்த ஸ்டைலை அவர் வில்லத்தனத்துக்கு பயன்படுத்தினாரோ அதே ஸ்டைலைத்தான் லேசாக மாற்றி ஹீரோயிசத்துக்கும் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட அவரது ஸ்டைலை தமிழில் வில்லனாக நடித்தபோது பின்பற்றியவர்தான் ரஜினி. இருவருக்கு இடையே அப்போதே நல்ல நட்புக்கு இந்த நடிப்பு ஒற்றுமையும் ஒரு காரணமாக அமைந்தது.