சென்னை: திருத்தணியில் வீடு புகுந்து தாய், மகனை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் தனிப்படை அமைத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வனப்பெருமாள் (50). இவர், திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் செக்யூரிட்டி சூபர்வைசராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதி பி.ஜி.புதூர், பாலாஜி நகரில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி (45), மகன் போத்திராஜா (13) ஆகியோருடன் வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு வழக்கம்போல் வனப்பெருமாள் வேலைக்கு சென்றுவிட்டு 9ம் தேதி காலை வீடு திரும்பினார். அப்போது மனைவி வீரலட்சுமி, மகன் போத்திராஜா ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். வீரலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகை, பீரோவில் இருந்த 22 சவரன் நகை என மொத்தம் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.