சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று 180வது வட்டத்துக்கு உட்பட்ட வேளச்சேரி, கானகம், பெரியார் நகர், தரமணி, 174வது வட்டத்துக்கு உட்பட்ட கக்கன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். குறிப்பாக பெரியார் நகரில் நரிக்குறவர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி மக்கள் இசக்கி சுப்பையாவுக்கு சிறப்பான வரவேற்பளித்து தங்களது வாக்குகளை பரிசு பெட்டி சின்னத்துக்கு அளிப்பதாக உறுதி அளித்தனர். அவருடன், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன், பகுதி செயலாளர் சந்திரபோஸ், பொருளாளர் சண்முகர் உட்பட ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.