சென்னை: சென்னை அண்ணா சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி இதுவரை, 80 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 132 கோடி மதிப்புள்ள 468 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை அண்ணா சாலை ஆயிரம்விளக்கு பகுதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்துகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வாகனத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர்கள் தனியார் நகைக் கடை ஊழியர்கள் என்றும், அவர்கள் உரிய ஆவணங்களின்றி நகையை எடுத்து வந்ததும் தெரியவந்தது.