திருவனந்தபுரம்: கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கேரளாவில் சமீப காலமாக வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பரவி வருவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது தொடர்பாக சர்வதேச அளவிலும் புகார்கள் உள்ளன. சர்வதேச போலீசான இன்டர்போலுக்கும் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்க இன்டர்போல் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம் சரக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தலைமையில் ‘பி-ஹண்ட்’ என்ற பெயரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கேரளா முழுவதும் 29 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சிறுவர், சிறுமியர் ஆபாச படங்களை பரப்பிய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.