சென்னை: கொடநாடு கொலை விவகாரத்தை முதல்வர் எடப்பாடியுடன் சம்பந்தப்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ள அறிவுரையில் நிரூபிக்கப்படாத, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தகூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்து கொள்கிறார்கள். கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசவோ, எழுதவோ அந்த குற்றச்சாட்டை முன்வைத்த மாத்யூ சாமுவேல் உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்டாலின் மட்டும் அது தொடர்பாக பொது வெளியில் போல பேசி வருகிறார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் மாதம் 22ம் தேதி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு ேதர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி இந்த மனுவை தாக்கல் செய்ய முடியும். தேர்தல் ஆணையத்தின் விதிகளில் வேட்பாளருக்கு எதிராகத்தான் பேசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளருக்கு எதிராக எதுவும் பேசவில்லையே. எப்படி தேர்தல் விதிமீறல் ஆகும் என்று கேள்வி எழுப்பினர்.