சென்னை: பெரம்பூரில் தேர்தல் அலுவலக திறப்புவிழாவின்போது தேமுதிக தொண்டர்களை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விரட்டியடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக கூட்டணி சார்பில், தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் பேப்பர் மில் சாலையில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பிரசாரம் செய்தார். அப்போது ஆர்வத்துடன் அவரது அருகில் தொண்டர்கள் வந்தனர். ஆனால் அவர்களை விஜயபிரபாகரன் நெருங்க விடவில்லை. பாதுகாவலர்களை கொண்டு தள்ளிவிட செய்தார். இதன் காரணமாக தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.