கூடலூர்: கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதையை, மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே ஆய்வு செய்தார்.தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கே, பெரியாறு புலிகள் சரணாலய தமிழக எல்லைப்பகுதியில், 4,830 அடி உயரத்தில் கண்ணகி கோயில் உள்ளது. கோயிலுக்கு செல்ல கேரள எல்லையான குமுளியிலிருந்து கேரள அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப்பாதையும், கூடலூர் அருகே பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கிலோ மீட்டர் நடைபாதையும் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கோயில் இருப்பதால், இந்தப்பாதைகள் வழியாக ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.