சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககத்தில் மருந்தாளுனர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட வெயிட்டேஜ் முறையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மருந்தாளுனர்கள் கூறியதாவது: மருந்தாளுனர்கள் நியமனத்தில், 10ம் வகுப்பு மதிப்பெண், பிளஸ்2 மதிப்பெண், டிப்ளமோவில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை உருவாக்கப்பட்டது. ஆனால் டிஇடி நுழைவுத்தேர்வில் பிளஸ்2, கல்லூரி, பி.எட் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அத்துடன் நுழைவுத்தேர்வும் மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2009ம் ஆண்டு ஒருங்கிணைந்த மருந்தாளுனர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிப்ைப முடித்தவர்களில் 3 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2018ம் ஆண்டு டிப்ளமோ முடித்த 5 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 தேர்வில், பின்பற்றப்படும் நடைமுறைகள், படிப்பதற்கு 15 நிமிடங்கள் உள்ளிட்டவை சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டவை. அதே போல் சில ஆண்டுகளில் பிளஸ்2 வினாத்தாள் எளிதாக கேட்கப்படும், சில ஆண்டுகளில் கடினமானதாக கேட்கப்படும். ஒருங்கிணைந்த மருந்தாளுனர் படிப்பு தொடங்கப்பட்டு, 2009ம் ஆண்டு மருந்தாளுனர் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் படித்து முடித்த பின்னரே, தமிழக அரசு வெயிட்டேஜ் முறைக்கான அரசாணையை கொண்டு வந்துள்ளது.