சென்னை: இம்மாதம் 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்றுடன் முடிந்தது. இறுதி நாளான நேற்று நடந்த உயிரியல் பாடத் தேர்வின் கேள்வித்தாள் கடினமாக இருந்ததால் மாணவ-மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. குளறுபடிகள் ஏதும் இல்லாமல் நடந்த இந்த தேர்வு நேற்றுடன் முடிந்தது. இறுதி நாளான நேற்று மட்டும் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 100 மதிப்பெண்களுக்கு விடை எழுத வேண்டும். அதனால் எளிதாக இருக்கும் என்று மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பிளஸ் 2 தேர்வுகளை எதிர்கொண்டனர்.