பெரம்பூர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளில் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொடுங்கையூர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் 100 மீட்டர் தூரத்துக்கு ஒரு கோடும், 200 மீட்டர் தூரத்துக்கு ஒரு கோடு போடும் பணி நடந்து வருகிறது.
கடந்த காலங்களில் தேர்தல் பிரசாரம், வாக்கு சேகரிப்பின் போது அரசியல் கட்சியினர் இடையே மோதல்கள் ஏற்பட்டது. குறிப்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பல இடங்களில் இந்த மோதல் சம்பவங்கள் நடைபெற்றது. தற்போது, மேற்கண்ட இரு தொகுதிகளிலும் பறக்கும் படையினர் குறைந்தளவே உள்ளதால், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் ஆகியவற்றை மறைமுகமாக வழங்கி வருகின்றனர். மேலும், பரிசு பொருட்களை பதுக்கியும் வைக்கின்றனர்.