சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் உள்ள கட்டுமானம் மற்றும் நீர்வளம் ஆகிய பிரிவுகள் மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், அணைகள், ஏரிகள் புனரமைத்தல், புதிதாக அணைக்கட்டு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிதியை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு, தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. அதன்பிறகே திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். சில நேரங்களில் நிதி ஒதுக்கீடு, டெண்டர் விடுவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்ட பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும் என்ற நிலையில், கடந்த டிசம்பர், ஜனவரி மாதத்தில் ரூ.2.800 கோடியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.1532 கோடியில் அத்திக்கடவு, அவினாசி திட்டம், ரூ.400 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, முக்கொம்பு கதவணை கட்ட ரூ.330 கோடி, ரூ.83 கோடி செலவில் அடையாறு தூர்வாரும் பணி, ரூ.150 கோடி செலவில் பாலாறு, நம்பியாறு உள்ளிட்ட பல்ேவறு ஆற்றுப்படுகைகளில் தடுப்பணை, ரூ.3.72 கோடி செலவில் மணிமுத்தாறு அணை புனரமைப்பு, ரூ.1.82 கோடி செலவில் செங்குன்றம் ஏரி, ரூ.1.91 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.2.800 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு, உடனடியாக ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்த நிறுவனம் சார்பில் உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது.