சென்னை: சென்னையில் 10க்கும் மேற்பட்ட போலி BPO நிறுவனங்களை தொடங்கி தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய கும்பல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி போலீசாரிடம் சிக்கியது. மேலும் 300க்கும் மேற்பட்ட டெலிகாலர்ஸ் மூலம் குறைந்த வட்டிக்கு வங்கி கடன் என ஏமாற்றி மோசடியில் ஈடுப்பட்ட அந்த கும்பலின் தலைவன் கோபிகிருஷ்ணன் உட்பட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கே.கே.நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவன் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க அவன் பயன்படுத்திய நூதன தொழில்நுட்ப முறைகள் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது. குறைந்த வட்டிக்கு தனி நபர் கடன் கோரும் அப்பாவி மக்களிடம் இந்த கும்பல் வழக்கமான ஆவணங்களான ஆதார் அட்டை நகல், பான் கார்ட் நகல் மற்றும் டெபிட் கார்ட் நகலையும் வாங்கியுள்ளது. பின்னர் கடன் பெற வங்கி கணக்கில் ரூ. 50,000 முதல் ரூ. 1,00,000 லட்சம் ரூபாய் வரை குறைந்த பட்சம் இருப்புத் தொகை இருக்க வேண்டும் என இந்த கும்பல் கூறியுள்ளது. அவர்கள் கணக்கில் பணம் ஏறியதும் கடன் தொகை அங்கீகரிக்கப்பட்டதாக கூறி செல்போனுக்கு வரும் OTP நம்பரை கேட்டு பணத்தை சுருட்டியுள்ளது இந்த கும்பல்.எனவே இந்த மோசடியில் தற்போது பிடிபட்டுள்ள மணிகண்டன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்து வந்துள்ளான்.