சென்னை: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி புத்தூரில், தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் நேரடி கவனம் செலுத்தி அந்த வட்டார மக்களுக்கு கல்வி வாய்ப்புக்களை வழங்கும் சீர்மிகு நிறுவனமாக பெரியார் கல்வி வளாகம் திகழ்ந்துகொண்டு இருக்கின்றது.சிறப்பு மிக்க அந்தக் கல்வி வளாகத்தின் சுற்றுச் சுவர் அன்னை மணியம்மையார் நினைவு நாளான நேற்று நெடுஞ்சாலைத் துறையினரால் அராஜகமாக இடிக்கப்பட்ட செய்தியையும், அதிகாரிகளின் பொறுப்பற்ற கடிதத்தையும், இடித்துத் தூள் தூளாக்கப்பட்ட சுற்றுச் சுவரின் படத்தையும் கண்டு மனம் பதைத்துப்போனேன்.