சென்னை: ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் பிரிவு சிறப்பு தாசில்தாரர் தர்மராஜ், ஊழல் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தர்மராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்மராஜ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் அடிப்படையில் தர்மராஜின் பதவி உயர்வை தடுக்கும் நோக்கில் 2018 அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் உள்ளது. எனவே, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, தர்மராஜ் மீது 2016ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து தற்போது கவனத்துக்கு வந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: பணியிடை நீக்கம் என்பது குற்றச்சாட்டுகள் குறித்து துறைரீதியான விசாரணைக்கு ஏதுவாக அலுவல்களில் இருந்து நீக்கி வைப்பது தானே தவிர, தண்டனையல்ல.