புதுடெல்லி: போயிங் 737 ரக விமானத்தின் சேவையை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போயிங் ரக விமானம் 6 மாதத்தில் 2 முறை விபத்துள்ளாகியுள்ளது. அடிக்கடி விபத்துக்குள்ளாவதால் போயிங் 737 ரக விமான சேவையை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா. இங்குள்ள போல் விமான நிலையத்தில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் போயிங் விமானம் இடி-302, நேற்று காலை புறப்பட்டது.
அதில், 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட 6வது நிமிடத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடத்திலேயே, அந்த விமானம் அட்டிஸ் அபாபாவின் அருகில் உள்ள பிஷோப்து பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது. மேலும், விமானத்தில் பயணம் செய்த 157 பயணிகளில் யாருமே உயிர் பிழைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் உறுதி செய்தது.
இதற்கு முன், கடந்த அக்டோபர் 29ம் தேதி இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட லயன் ஏர் போயிங் 737 மேக்ஸ் விமானம் அடுத்த சில நிமிடங்களில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 189 பயணிகள் இறந்தனர். சர்வதேச அளவில் பயணிகள் விமானத்தில் அதிகளவில் விற்கப்படும் விமானமான போயிங் 737 மேக்ஸ், அடுத்தடுத்து 2 பெரிய விபத்துகளை சந்தித்திருப்பதும் விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போயிங் 737 ரக விமானத்தின் சேவையை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி