சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னைக்கு நேற்று காலை வந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரவு தனியார் விமானத்தில் டிக்கெட் புக் செய்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் மத்திய, மாநில அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. இதற்கிடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11.20 மணிக்கு டெல்லியில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் சென்னை வந்தார். பின்னர் அவர் அதே இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக அவர் சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 5ல் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.