அண்ணாநகர்: வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் அருகே போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.செம்பியம் காவல் நிலையத்தில் போக்குவரத்து எஸ்.ஐயாக இருப்பவர் குமார் (57). இவர், நேற்று மாலை வில்லிவாக்கம், நாதமுனி திரையரங்கம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தபோது அவர் மது அருந்தி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து எஸ்.ஐ குமார் அவரிடம் கேட்டபோது, ஆத்திரம் அடைந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டு பைக் சாவியால் காவலர் முகத்தில் குத்தினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வாலிபரை பிடித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.