சென்னை: 139 சித்தா மருந்தாளுனர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் சுகாதாரத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தால் தற்போது தெரிவு செய்யப்பட்ட 139 சித்தா மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, நேற்று 7 சித்தா மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
புதுடில்லியில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், சுவஸ்த் பாரத் யாத்ராவில், சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழ்நாட்டிற்கும், சிறந்த நகரங்களுக்கான விருதுகளை மதுரை, சிவகாசி நகரங்களுக்கும் சிறந்த ஆய்வகத்திற்கான விருதினை நடமாடும் உணவு ஆய்வகத்திற்கும், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரிடம் வழங்கினார். இந்த விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காண்பித்து வாழ்த்து பெற்றார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி