ஆவடி: ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலை பகுதியில் மழைநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் பல ஆண்டாக திறந்தவெளியிலும், மூடிய நிலையிலும், தற்காலிக கால்வாயாக தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டாக கம்பெனிகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் நீர் இந்த கால்வாயில் விடப்படுகிறது. இதனால், கால்வாய் நாளடைவில் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இந்த கழிவுநீர் அரபாத் எரிக்குள் சென்று கலக்கிறது. இதனை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பது கிடையாது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சி.டி.எச் சாலை, கல்லறை தோட்டம், பெட்ரோல் பங்க் அருகில் ஒரு மாதமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பல ஆண்டாகியும் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தற்காலிக கால்வாய் வழியாக செல்கிறது.