பல்வேறு விபத்துக்களில் இறந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் கவுசல்யா, மணி என்பவரின் மகள் மணிமொழி, சண்முகம் என்பவரின் மகள் பவ்தாரணி ஆகிய மூன்று பேர் கிணற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பூனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரின் மனைவி சித்திரா என்பவர் நெல் அறுக்கும் இயந்திரத்தில், சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் புறவழிச் சாலையில், மினிவேன் மற்றும் பேருந்துக்கள் மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அம்சத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், பிரவீன் ஜீவரூபி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தவசிமுத்து ஆகிய 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

அதே போல் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அரசு கவின் கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த, தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், சின்னமலை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் விக்னேஷ்குமார் என்பவர் வட மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியையும், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் சரவணன் என்பவர் ரஷ்யா நாட்டு கடல் பகுதியில், கப்பல் தீப்பிடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் ராஜவேல் என்பவர் தனது கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில், உயிரிழந்தார் என்ற செய்தியையும், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்பவரின் மகன் மண்ணாங்கட்டி என்பவர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், தெற்கு பெத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகன் பரமேஸ்வரம் என்பவரின் மீது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பல்வேறு நிகழ்வுகளில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: